பாறுக் ஷிஹான்.
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓரங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம், கல்முனைப்பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் மாலை முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இப்பரிசோதனை நடவடிக்கையானது, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் ஒருங்கிணைப்பில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்விசேட சோதனை நடவடிக்கையில் இணைந்திருந்தமை குறிப்பித்தக்கது.
மேலும், நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதானவர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின், போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கெதிரான யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் தற்போது வரை குற்றச்செயல்கள் கணிசமானளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.