பாறுக் ஷிஹான்.
நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினமொன்று கடந்த சனிக்கிழமை (7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரிலுள்ள தனியார் வாகனத்திருத்துமிடத்திற்கு வழி தவறிச்சென்ற நிலையில் பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் நீர் நாய் வகையைச்சேர்ந்ததாகும். (Smooth-coated Otter) இது தோற்றத்தில் பெரிய உடலைக்கொண்டிருக்கிறது. இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக்கருதப்படுகிறது.
இது இந்தியத்துணைக்கண்டத்திலும் தென் கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. மற்ற நீர் நாய்களை விட இதன் மேலுள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுகிறது.
இவை ஆற்றில் நீந்தி மீன்களைப் பிடிக்க ஏதுவாக இவற்றின் கால்களில் வாத்துக்களுக்குப் போல விரலிடைத்தோல் உண்டு. இவற்றின் பட்டையான நீண்ட வாலானது துடுப்புபோல நீந்தப்பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.