(பாறுக் ஷிஹான்).
Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப்பூனை (Fishing cat) இனத்தைச்சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப்புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது.
THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடிப்பூனை (அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன், மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகைப்புலிகள் காடுகளிலிருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராமவாசிகளின் வளர்ப்புப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் உடலம் விபத்துச் சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா? அல்லது எவராலும் தாக்கிக்கொல்லப்பட்டதா? என்ற விசாரணைகளை வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காட்டுப்பூனை என அழைக்கப்படும் இப்புலியைச்சுற்றி மல்லிகைப்பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அண்மைக்காலமாக அப்பகுதியிலுள்ள கோழிகளை வேட்டையாடி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், இதே போன்று அண்மையில் கோட்டைக்கல்லாற்றுப் பாலமருகிலும் புலியின் உடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
மீன்பிடிப்பூனைகள் சற்று பெரிய பூனைகளாகும். இவை விட்டுப்பூனைகளை விட இரண்டு மடங்கு பெரியதாகும். இது பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலும், அதில் கரும் புள்ளிகளும், குறுகிய வாலும் உண்டு.
இதன் கன்னத்தில் ஒரு சோடி பட்டைகள் காணப்படும். நெற்றிப்பகுதியில் ஆறு முதல் எட்டு வரையிலான கருங்கோடுகள் இதன் தனித்த அடையாளமாகும். கருப்பு நிற கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய ஆழமான மஞ்சள்-சாம்பல் நிற ரோமங்களைக் கொண்டிருக்கும். 22 முதல் 31 அங்குலம் வரை வளரக்கூடியது .
பெரும்பாலும் ஈரநிலங்களுக்கருகில், ஆறுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது. அங்கு அது பெரும்பாலும் மீன்கள், பறவைள், பூச்சிகள், சிறிய விலங்குகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை வேட்டையாடக்கூடியது.
மீன்பிடிப்பூனை இரவு நேரங்களில் வெளியில் அதிகமாக நடமாடக்கூடியது. இது நல்ல முறையில் நீந்தி நீருக்கடியில் கூட நீண்ட தூரம் செல்லக்கூடியது.
இந்த மீன்பிடிப்பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன், ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது. இது தென் மற்றும் தென் கிழக்காசியாவில் காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த அரிய வகைப்புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மீன்பிடிப்பூனைகள் இரவு வாழ்க்கையுள்ள விலங்காகும். இரவு நேரங்களில் (நள்ளிரவில்) மீன்கள் பிடிக்க நீர்நிலைகளை நோக்கி வரும் போது வேகமாகவும், கவனிக்காமலும் வரும் சாரதிகளால் இப்பூனைகள் கொல்லப்படுகின்றன.
சமீபகாலமாக வீதிக்கொலைகளால் அல்லது வாகன மோதல்களால் கொல்லப்படும் மீன்பிடிக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
Prionailurus viverrinus என்ற விலங்கியற்பெயர் கொண்ட மீன்பிடிக்கும் பூனையானது (Fishing Cat) தென்னாசியா, தென் கிழக்காசியாவில் காணப்படும் காட்டுப்பூனையினங்களில் ஒன்றாகும்.
இலங்கையில் பல இடங்களில் பரவிக் காணப்பட்டாலும், இப்பூனையினங்கள் வன்னி, யாழ்ப்பாணம் போன்ற வட மாகாணப்பகுதிகளில் காணப்படுவதில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.
இலங்கையைப்பொறுத்த வரை, இது அழிவின் ஆபத்திலிருக்கும் விலங்காகும்.