Ads Area

மாட்டிறைச்சி விலையை 1700 ரூபாவாகக் குறைக்க தேர்தலில் போட்டி - கே.எல்.சமீம்.

 (பாறுக் ஷிஹான்)


இறக்காமம் பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். இதற்காக மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாவாகக் குறைக்க இத்தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்டத் தீர்மானித்துள்ளோம் என கால்பந்து சின்னம் சுயேட்சைக்குழுத்தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்ட செயலகத்தில்  ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர், 


அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச சபையானது  3வது தேர்தலை முகங்கொடுக்கின்றது. 


இதில் சுயேட்சைக்குழுவாக நாங்கள் போட்டியிடுகின்றோம். 


கட்சிகளில் அவநம்பிக்கை காரணமாக நாம் சுயேட்சையில் களமிறங்கியுள்ளோம். அதே வேளை, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதுடன் இறக்காமம் பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாய்க்கு வழங்குவதும் எமது சுயேட்சைக்குழுவின் நோக்கமாகும்.


இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவின்மையால் அம்பாறை பொது வைத்தியசாலையில் பதிவுகள் சிங்கள மொழியில் இடம்பெறுவதனால் அகமது என்ற பெயர் முகம்மது எனவும் அன்சார் என்ற பெயர் கின்சார் என்றும் கபீப் என்ற பெயர் குபாப் என்றும் மாறி வருவதனால் பாடசாலைக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் சத்தியக்கடதாசி தேடுகின்ற அவல நிலைக்கு இறக்காமம் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.


இவ்வாறான உரிமை சார்ந்த பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவே எந்தவித கட்சித்தலைவர்களதும் அழுத்தமின்றி இம்முறை சுயேட்சைக்குழுவில் சுயமாக இயங்கத் தீர்மானித்துள்ளோம்.


அத்தோடு, இறக்காமம் மக்களின் நீதி, நிர்வாகம் அம்பாறையுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் மொழி ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். 


நீதிமன்றத்தில் சுயமாக எமது மொழியில் அபிப்பிராயங்களைக்கூற முடியாமல் எமது மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. தமிழ்மொழி மூலமாக நிர்வாகம் இருக்கின்ற இறக்காமம் மக்களை நீதி நிர்வாக விடயங்களை அக்கரைப்பற்றுடன் இணைத்து தனியான சுற்றுலா நீதிமன்றத்தை ஏற்படுத்தி எமது மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்காகவே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகின்றோம்.


இது தவிர, தற்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தி எமக்கு ஒரு சவாலாக அமையாது. தேசிய மக்கள் சக்திக்கு முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற பகுதியில் செல்வாக்கு குறைந்து வருவதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


எமக்கு சர்வதேச தொடர்புகள் இருக்கின்றது. நிச்சயமாக எமது வட்டாரங்களை வெற்றி பெறுவதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.


இறக்காமம் பிரதேச சபையிலுள்ள 13 ஆசனங்களில் 5 முதல் 6 ஆசனங்களை நாம் பெறக்கூடிய சூழல் தற்போது எழுந்துள்ளது. அந்த வகையில், இறக்காமம் பிரதேச மக்கள் நம்பிக்கையுடன் ஆட்சியை ஒப்படையுங்கள். 


ஊழலற்ற இறக்காமம் பிரதேச சபையினை நாம் உருவாக்குவோம் என்ற செய்தியைய் தெரிவிக்க விரும்புகின்றேன்.


இறக்காமம் பிரதேச சபையில் ஆண்டாண்டு காலமாக முஸ்லீம் கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன. தற்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் களமிறங்கியுள்ளன. 


இக்கட்சிகள் கூட எமது சுயேட்சைக்குழுவிற்கு சவாலாக இருக்காதென நம்புகின்றேன். இலகுவாக வெற்றியடையக்கூடிய வாய்ப்பு எமக்குள்ளது என சுயேட்சைக் குழுத்தலைவர் குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe