Ads Area

கல்முனையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் லஞ்சம் பெற்ற இருவர் கைது.

 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பஸ் நடத்துநர் ஒருவரிடமிருந்து  இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் ஒருவரையும் அங்கு கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரையும்  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனையில்  அமைந்துள்ள  பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர்    தன்னிடம் ஒரு லட்சம் ரூபா  இலஞ்சம் கோருவதாக பணிநீக்கம் செய்யப்பட்ட பஸ் நடத்துநர் ஒருவர்  கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.


இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, நேற்று  செவ்வாய்க்கிழமை (22)  கல்முனையில்  அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் கூறியமைக்கு அமைவாக அவரின் காரியாலய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்   இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை  பணிநீக்கம் செய்யப்பட்ட பஸ் நடத்துநர் வழங்கியுள்ளார்.


இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகரையும் அங்கு கடமையாற்றும்  பாதுகாப்பு உத்தியோகத்தரையும்  கைது செய்தனர்.


இதனையடுத்து கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர்  மற்றும்   பாதுகாப்பு உத்தியோகத்தர்  இருவரையும் கல்முனை  நீதிவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) முன்னிலைப்படுத்திய போது  14 நாட்கள்  சந்தேக நபர்களை  விளக்கமறியவில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


கடந்த காலத்தில் திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் பஸ் நடத்துநர் ஒருவர் மேற்கொண்ட நிதி மோசடி காரணமாக பணியில்  இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு  எதிராக விசாரணையின்போது   சட்ட நடவடிக்கை எடுக்காமலிருக்கும் பொருட்டும் மீண்டும் பணியில் குறித்த பேருந்து நடத்துநரை இணைத்து கொள்வதற்காகவும்  குறித்தபணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநரிடம் இருந்து   மேற்படி கிழக்கு மாகாண ஒழுக்காற்று குழு பரிசோதகர் இலஞ்சம் கோரியதாக தெரிய வருகிறது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe