சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
கிழங்கு மாகாணத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் "சரோஜா" எனும் பொலிஸ் திட்டத்தின் கலந்துரையாடல் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தலைமையில் அண்மையில் அம்பாறை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் தலைமையில் சம்மாந்துறை சமூக பொலிஸ் குழுவின் தலைவர்களுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) சம்மாந்துறை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 51 கிராம சேவகர் பிரிவில் காணப்படும் தாய் மற்றும் தந்தைகளை இழந்து உறவினர்களிடம் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விபரங்களை பெற்றுத் தருமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் ஊடாக சிறுவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களை குறைப்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், சம்மாந்துறை சமூக பொலிஸ் குழுவின் தலைவர்கள், சம்மாந்துறை பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.