பாறுக் ஷிஹான்.
கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் பகலிரவு பாராது ஆக்கிரமித்துள்ள கட்டாக்காலி மாடுகள் தினமும் பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடமாடி வருகின்றன.
இப்பகுதியிலுள்ள அரச, தனியார் நிறுவனங்களுக்கு முன்பாக தினமும் சஞ்சாரம் செய்வதுடன், அப்பகுதிகளை சுகாதாரச்சீர்கேடான இடங்களாக மாற்றுவதுடன் அப்பகுதியில் துர்நாற்றமும் ஏற்படகின்றது.
மேலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை, கல்முனைப்பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடம், இலங்கை மின்சார சபை, கல்முனை பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் நடமாடுவதுடன், சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
வீதிகளில் இரவு வேளையில் நடமாடித்திரியும் சுமார் 25 க்கும் மேற்பட்ட கறுப்பு, வெள்ளை, மஞ்சள் வர்ணம் கொண்ட கட்டாக்காலி மாடுகள் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கூட்டங்கூட்டமாக அலைந்து திரிகின்றது. இதனால் வீதிப்போக்குவரத்து இஸ்தம்பிதமடைந்து வருவதுடன், வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.
இவ்வாறான கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், விபத்துக்களைக் குறைக்கும் வகையிலும் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸார் முன்னெடுத்த போதிலும் தற்போது இவ்வாறு மேற்கொள்ளாமையினால் பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் மாடுகள் படுத்துறங்குவது, நிற்பது போன்றவற்றினால் பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாகக் காணப்படுகின்ற இவ்வாறான கட்டர்காலி மாடுகளை கல்முனை மாநகர சபை அதிகாரங்களைக்கொண்டு ஏன் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகர சபையினால் கடந்த காலங்களிவ் போக்குவரத்துக்கு இடையூறாகக் காணப்பட்ட கட்டக்காலி மாடுகளை பொலிஸாருடன் இணைந்து பிடித்ததை போன்று எதிர்காலத்தில் பிடித்து கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் ஏற்படுகின்ற வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மாநகரப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டக்காலி மாடுகள் கடந்த காலங்களில் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.