(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டம் - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப்படையினர் குறித்த கைது நடவடிக்கையை ஞாயிற்றுக்கிழமை (05) இரவு முன்னெடுத்தனர்.
ஐஸ் 760 மில்லி கிராம் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டது. கைதானவர் பெரிய நீலாவணை பகுதி வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவராவார். இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட கல்முனைக்குடி-3 பிரிவு, கடற்கரை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்ருகில் 27 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இச்சந்தேக நபர் வசமிருந்து ஐஸ் 1,800 மில்லி கிராம் மீட்கப்பட்டது. குறித்த சந்தேக நபர் இனிப்பு வியாபாரி போன்று நடமாடி போதைப்பொருளுடன் கைதானதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர்.
மேலும், இச்சோதனை நடவடிக்கை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப்பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.சமந்த டி சில்வாவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி ரத்னவீர அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என் குலதுங்கவின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.