குவைத்தின் Al-Shaab Al-Bahri பகுதியில் ஆசிய நாட்டவரான வீட்டுப் பணிப்பெண் இறந்து கிடப்பதாக உள்துறை அமைச்சக கட்டுபாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அழைத்த அரபு நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹவாலி கவர்னரேட்டின் பாதுகாப்பு அதிகாரிகள், துப்பறியும் அதிகாரிகள், தடயவியல் அதிகாரிகள், பிரேத பரிசோதனை அதிகாரி மற்றும் அரசு வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் வீட்டு பணிப்பெண் அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் இறந்து கிடந்தார்.
ஆரம்பகட்ட பரிசோதனையில் உடலில் வெந்நீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட பலத்த தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் ரத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் வீட்டுப் பணியாளருக்கும் ஸ்பான்சரின் மனைவிக்கும் இடையே தகராறுகள் இருந்ததாகவும், தனது குழந்தையைத் தாக்கியதற்காக பணிப்பெண்ணை லேசாக அடித்ததாகவும், பின்னர் சமையலறைக்குள் இறந்து கிடந்ததாகவும் மனைவி ஆரம்பகட்ட விசாரணையில் கூறினார். தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர் ஆசியா நாட்டவரான பணிப்பெண் என்று தெரிவித்த அதிகாரிகள் குறிப்பாக எந்த நாட்டவர் என்ற விபரத்தை வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட கணவன், மனைவி அரபு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

