பாறுக் ஷிஹான்.
பொத்துவில் பிரதேசத்தில் பானமை சாஸ்திரவேல பகுதியில் காரில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட சோதனையின் போது, 70 கிலோ கிராம் காட்டெருமை (குளுமாடு) மற்றும் மான் இறைச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளை நிற காரில் இவ்விறைச்சியைக் கடத்திச் சென்ற போது, பானமை சாஸ்திரவேல பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, இறைச்சியை எடைபோடப்பயன்படுத்திய தராசு, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், படகுகள் மூலம் சென்று வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று ( 14) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 2026.03.24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இச்சுற்றிவளைப்பில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளான பி.எம்.ஜி.சி.பண்டார, டி.எம்.டி.எல். திஸாநாயக்க, உதவி அதிகாரி விக்கிரமரத்ன, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கே.ஹனோஜன், கள உதவியாளர் ஆர்.எம்.லக்ஷ்மன், சாரதிகளான அத்தநாயக்க மற்றும் ரசிக ஆகியோருடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

