சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சமுர்த்தி அபிமானி" வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் நேற்று (11) சனிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் மிலேனியம் சமுர்த்தி வங்கி வளாகத்திற்கு அருகாமையில் இந்நிழ்வு இடம்பெற்றது.
இதன்போது சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 'சிப்தொர'புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வி. வாசீத் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இவ் வர்த்தகக் கண்காட்சியில் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் பொதுமக்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (சமுர்த்தி) எப். ரஹீமா, முன்னாள் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் யூ.எல். சலீம், மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஸட். ஏ. அப்துல் ரஹ்மான், பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அஸ் ஸிராஜ், ஹிஜ்ரா, ஹுதா, மிலேனியம் ஆகிய சமுர்த்தி வங்கிகள், வங்கிச் சங்கம், பிரதேசமட்ட அமைப்புகள் மற்றும் சமுர்த்தி வர்த்தக சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்தச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




