பாறுக் ஷிஹான்.
விளையாட்டுப்பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவையூடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் புதன்கிழமை ( மாலை இடம்பெற்றதுடன், குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகள் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவுப்பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ் ரத்னாயக்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது 43 வயது மதிக்கத்தக்க தோடம்பழம் சுயேட்சைக்குழுவின் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பிராகச்செயற்பட்டவர் சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருந்ததுடன், குறித்த கொரியர் சேவையூடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப்பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப்பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலத்திரனியல் தராசு 2 கைத்தொலைபேசிகள் ஒரு தொகைப்பணம் கொரியரூடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கைதான சந்தேக நபரை இன்று (09) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


