மஜீட். ARM
சம்மாந்துறை கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இன்று (மே 13) திகதி அல் -அர்ஷத் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் அபார வெற்றி பெற்று, மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுக்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலய அணியை எதிர்த்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அணி களம் கண்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலய அணி, நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 45 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
46 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அணி, ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எனினும், இக்கட்டான நிலையில் களம் புகுந்த பின்வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இறுதியில் எதிரணியை வீழ்த்தி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி வெற்றி வாகை சூடியது.
இந்த வெற்றியின் மூலம் சம்மாந்துறை கல்வி வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவ்வணி உறுதி செய்துள்ளது.

