சம்மாந்துறை அன்சார்.
"வளமான நாடு, அழகான வாழ்க்கை" எனும் அரசாங்கத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, சம்மாந்துறை கால்நடை மிருக வைத்திய அதிகாரி காரியாலய புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா அண்மையில் (29/05/2026) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இப்புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ரூபா 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பிரதி மிருக வைத்திய பணிப்பாளர் Dr. நௌசாட் ஜமால்டீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் Dr. ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதியாக கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் கலந்து கொண்டார்.
இவர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளரும், ஜனாதிபதி செயலகத்தின் 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ வை. பி. நபாஸ் மற்றும் பிரஜா சக்தி அமைப்புகளின் தவிசாளர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்புதிய காரியாலயக் கட்டடம் நிறைவுறும் போது, சம்மாந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களின் கால்நடை வளர்ப்பாளர்களுக்கான சேவைகள் மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு, விரைவாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





