மஜீட். ARM.
"அனைவருக்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர்" எனும் தொனிப்பொருளில், சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 10 இடங்களில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி மற்றும் நீர்க்குழாய் கட்டமைப்புகள் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சர்வதேச மனிதாபிமான அமைப்பான நெதர்லாந்து நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், அல் கித்மதுல் உம்மா பௌண்டேசனின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான செயற்திட்டம், ஒருவரது தனிப்பட்ட முயற்சியின் ஊடாக வெற்றியளித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள், வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் என அதிக மக்கள் நடமாட்டம் உள்ள 10 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, அங்கு நவீன நீர்த்தாங்கி மற்றும் நீர்க்குழாய் அமைப்புகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் சம்மாந்துரை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ILM. மாகிர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான YBM. நவாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு குடிநீர் கட்டமைப்புகளைத் திறந்து வைத்தனர்.
மேலும், இத்திட்டத்தை சம்மாந்துறையில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் வட்டார அமைப்பாளர்களும், பிரஜா சக்தி தவிசாளர்களுமான Mohamed Hinayathulla Rameez, Ab Irsath, விக்னேஸ்வரன் மற்றும் முஸாபிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து, சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இச்சேவை குறித்து பிரதேச மக்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

