மஜீட். ARM
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய மற்றும் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த பிரதான குற்றவாளியை சாமர்த்தியமாகக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஜனாதிபதியினால் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கந்தளாய் பிரதேசத்திற்கு உட்பட்ட வான்எல (Wanela) பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் திரு. ரமணன் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு ஜனாதிபதியின் விசேட பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார்.
களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர், பொலிஸாரிடம் சிக்காமல் நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, திரு. ரமணன் தனது கடமை நேரத்தில் மிக நுணுக்கமாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டு கைது செய்திருந்தார்.
இவரது இந்த அர்ப்பணிப்புள்ள மற்றும் சாமர்த்தியமான சேவையைப் பாராட்டி, இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இவருக்கான விசேட வெகுமதியும் சான்றிதழும் ஜனாதிபதியின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை உணர்வு நாட்டின் உயரிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையானது, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தங்களது கடமைகளை செவ்வனே செய்ய பெரும் ஊக்கத்தை அளித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


