ஜனாதிபதி செயலகத்தினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இம்முறை இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலமாக கோரப்பட்டிருந்த நிலையில், தகுதியான விண்ணப்பதாரிகள் மிகவும் வெளிப்படையான முறையில் பரிசீலிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளோக் ஜே. கிழக்கு - 2 கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த, களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் (Software Engineering) துறையில் கல்வி பயிலும் ஏ.எப்.டி. தூபா என்ற மாணவி, தனது உயர்கல்வித் தேவைக்காக மடிக்கணினி (Laptop) ஒன்றினைப் பெற்றுத் தருமாறு நிகழ்நிலை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
இம்மாணவியின் விண்ணப்பத்தை அடுத்து, சம்மாந்துறை பிரதேச செயலக சமூக சேவை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கள விஜய அறிக்கையின் (Field Visit Report) பிரகாரம், மாணவியின் கல்வித் தேவை மற்றும் தகைமை உறுதிப்படுத்தப்பட்டு இந்த உதவி அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், அவருக்கான புதிய மடிக்கணினியினை கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி நிதிய செயலகத்தில் வைத்து அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் கல்வி உதவித் திட்டத்தினூடாக மாணவர் ஒருவருக்கு மடிக்கணினி ஒன்று கிடைத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

