Ads Area

பொலிஸ் தடுப்புக்காவலிலிருந்த குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் உயிரிழப்பு - பொலிஸார் இடைநிறுத்தம்.

 பாறுக் ஷிஹான்.


குடும்பப்பிரச்சினைக்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்பப்பிரச்சினையொன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ளது.


இதற்கமைய சிறைக்கூடத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்ற வேளை கடமையிலிருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள்   இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், காரைதீவு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ணவிற்கும் உள்ளக விசாரணை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


குறித்த விசாரணையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்லில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி நந்தநாராயண நெறிப்படுத்தலில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.


மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான  காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச்சேர்ந்த  சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.


இவர் முன்னாள் ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் என்பதுடன், உயிரிழந்த குடும்பஸ்தரின்  சடலமானது அண்மையில் நல்லடக்கத்திற்காக அம்பாறை பொதுவைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe