சம்மாந்துறை அன்சார்.
கல்முனை கடற்பரப்பில் இன்றைய தினம் (14) காலை வேளையில் மீனவர்களின் கரை வலைகளில் அதிகளவிலான சூரை மீன்கள் சிக்கியுள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்முனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கரை வலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் வலைகளில் பெருமளவிலான சூரை மீன்கள் அகப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரைக்கு அதிகளவில் மீன்கள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவற்றை வாங்குவதற்காக வேன் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் கடற்கரையில் திரண்டனர்.
1 கிலோகிராம் சூரை மீன் ரூ. 1,400 முதல் ரூ. 1,600 வரை விற்பனை செய்யப்படுகின்றது. அண்மைக்காலமாக மீன்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த நுகர்வோருக்கு, இந்த விலை வீழ்ச்சி ஓரளவு நிம்மதியை அளித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தை நிலவரத்தின்படி, மீன் வரத்து அதிகமாகக் காணப்படும் பட்சத்தில் மாலை வேளையில் இதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.



