Ads Area

ஹாஜிகளுக்கு அரைகுறை ஏற்பாடுகள் : பல முறைகேடுகள் - விசாரணை அவசியம்..!


இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கு இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகள் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுயாதீனமாக விசாரணை செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா? இது பற்றி சுயாதீன விசாரணை நடத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் சபையில் ஹிஸ்புல்லா எம்பி கேள்விகளை எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் நேற்று (10) நிலையியல் கட்டளை 27/2ல் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு  கேள்வியெழுப்பிய ஹிஸ்புல்லா எம்பி தமது கேள்வியில் மேலும் தெரிவித்ததாவது, 


ஹஜ் என்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் வாழ்நாள் கனவாகும். இது வெறுமனே ஒரு சுற்றுலாப் பயணமல்ல. வாழ்நாளில் ஒரு முறையாவது இக்கடமையை நிறைவேற்ற வேண்டுமென ஏங்கும் ஒரு மகத்தான வணக்கநிலை புனித ஹஜ். பல ஆண்டுகள் உழைத்து சேமித்த பணத்தையும் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில், அல்லாஹ்வின் விருந்தினராக புனித ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லிம்கள் பயணிக்கின்றனர்.


ஹஜ்ஜின் நாட்கள் என்பது இறைவனை நினைத்து வணக்கங்களிலும் துஆக்களிலும் பாவமன்னிப்பைத் தேடுவதிலும் கழிக்கப்பட வேண்டிய அரிய தருணங்களாகும். துரதிஷ்டவசமாக, இந்தாண்டு பல ஹாஜிகள் தங்களது நேரத்தை வணக்கங்களிலும் பிரார்த்தனைகளிலும் செலவிடுவதற்குப் பதிலாக அடிப்படை வசதிகள், உணவு, தங்குமிடம் மற்றும் நிர்வாகக்குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளில் வீணடிக்க நேரிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 


ஹாஜிகளின் நலனும் அவர்களுக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளும் மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் கையாளப்பட வேண்டியது அவசியம்.


2026ம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளில் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் நிர்வாகக்குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன. 


குறிப்பாக, மினா முகாம்களில் ஒரு ஹாஜிக்கு ஒதுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பரப்பளவு, சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளின் தரநிலைகளை கிதானா நிறுவனம் நிர்ணயிக்கும் நிலையில் கடந்த ஆண்டில் சுமார் 3,500 ஹாஜிகளுக்காக 64 கழிப்பறைகளும் 8 பஃபே வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்தாண்டு கூடுதல் பரப்பளவு மற்றும் மேம்பட்ட வசதிகள் என்ற பெயரில் அதிக கட்டணம் அறவிடப்பட்ட போதிலும் வசதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமை ஹாஜிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், மினா முகாம் தெரிவு, சேவை வழங்குநர் நிறுவனத்தின் தெரிவு மற்றும் அதற்கான ஒப்பந்தங்களில் போதிய வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை. அனுபவமிக்க ஹஜ் முகவர்கள் வழங்கிய ஆலோசனைகள் உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படாமல் அவசர முடிவுகள் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


ஹஜ் நிதி முகாமைத்துவம், நிதி அனுப்பல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலதிகக்கட்டணங்கள் குறித்தும் முஸ்லிம் சமூகத்தில் பாரிய கவலை நிலவுகிறது.


ஹாஜிகள் மினாவில், அரபாவில், முஸ்தலிபாவில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்து பிரார்த்திக்க வேண்டிய நேரங்களில் தண்ணீர், உணவு, கழிப்பறை மற்றும் தங்குமிட வசதிகளைத் தேடி அலைந்ததாக நான் அறிகின்றேன்.


எனவே, ஹாஜிகள் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்ற உணர்வுடன் அவர்களுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவும் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் அமானித உணர் வோடும் பொறுப்புணர்வோடும் கையாளப்பட வேண்டும் என்பதை இச்சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe