எதிர்வரும் 2026-06-09ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் 12வது சபை அமர்விற்கு முன்னதாக, தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் (2026-06-05) வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை சம்மாந்துறையின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் விஸ்தரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் அவர்களின் ஏற்பாட்டில் உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைய இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறையிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரத்தியேகக் குழுக்களை அமைத்து, அதனூடாக அப்பிரதேச மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் தேவைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்து கட்சியின் நடவடிக்கைகளை பலப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். அதன் ஆரம்ப நிகழ்வாகவே நேற்றைய தினம் இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
பிரதேச சபை உறுப்பினர் கௌரவ றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முக்கிய அதிதிகளாக: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினரும் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளருமான கௌரவ ஐ.எல்.எம் மாஹிர் அவர்களும், வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஏ.எச்.எம். காலித் அவர்களும், சம்மாந்துறைப் பிரதேச சபையின் மத்திய வட்டார உறுப்பினரான கௌரவ அமீர் அப்னான் அவர்களும் மற்றும் மலையடி வட்டார பிரதேச சபை உறுப்பினரான கௌரவ ஏ.சி.எம். நயீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ உறுப்பினர் றிஸ்விகான், தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்கால அரசியல் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் கட்சியின் பணிகள், அரசியல் நகர்வுகள் மற்றும் வட்டார ரீதியான பிரச்சினைகள், தேவைகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அக்கேள்விகள் அனைத்திற்கும் சம்மாந்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் அனைத்துப் பிரதேச சபை உறுப்பினர்களாலும் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இறுதியில், கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் கௌரவ உறுப்பினர் றிஸ்விகான் அவர்களோடு இணைந்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றப் போவதாக உறுதியளித்தனர். அத்துடன், உடங்கா வட்டாரத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அவர் தொடர்ந்து ஆற்றிவரும் அரசியல் பணிகளைப் பாராட்டி, மக்கள் தமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.









