மஜீட். ARM
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல ஆலோசனைக்கு அமைவாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமாரவின் தலைமையில் இன்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை போக்குவரத்து பொலிஸ் குழுவினரால் விசேட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, தலைக்கவசம் அணியாமை மற்றும் அதிக சத்தத்துடன் அவதானமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமை போன்ற போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காக 42 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார விபரிக்கையில், சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வீதி ஒழுங்குமுறைகள் குறித்து பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், சில இளைஞர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அவதானமற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இவ்வாறான அலட்சியப் போக்கின் காரணமாக இப்பகுதியில் தொடர்ச்சியாகப் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இன்றைய விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக மிக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் உறுதியாகத் தெரிவித்தார்.

