Ads Area

பொலிஸ் காவலிலிருந்த இளைஞன் 'ஐஸ்' போதைப்பொருள் பக்கெட்டை விழுங்கி திடீர் மரணம்.

அம்பாறை நிருபர் - பாறுக் ஷிஹான்.


போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர்  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர்  23  அட்டப்பளம்  சகாத் கிராமத்தைச்சேர்ந்த 26 வயதுடைய அப்துல் வாஹிது வஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஞாயிற்றுக்கிழமை (5) மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த 'ஜெமில்' என்ற நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். 


இதன்போது ஜெமிலிடமிருந்து 2 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயினும் மற்ற இருவரிடமிருந்து தலா 60 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டன.


இதனைத்தொடர்ந்து கிடைத்த மேலதிக தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், 3 கிராம் 100 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நான்காவது சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட நால்வரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர். 


சம்பவ தினமான திங்கட்கிழமை (6) அதிகாலை 3.30 மணியளவில் சந்தேக நபர்களில் ஒருவரான வஜீத் என்பவர் வழமைக்கு மாறான முறையில் நடந்து கொண்டுள்ளார். உடனடியாகச்செயற்பட்ட பொலிஸார் அவரை நிந்தவூர் ஆதார  வைத்தியசாலையில்   அனுமதித்தனர். எனினும், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


உயிரிழந்த வஜீத் என்ற சந்தேக நபர் பொலிஸ் காவலிலிருன் தபோது தான் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டை விழுங்கி விட்டதாக அவருடன் கைவிலங்கிடப்பட்டிருந்த மற்றொரு கைதி தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அதனை விழுங்கியதாகவே கூறப்படுகின்றது.


உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை பிணவறையில்  வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை பொது மருத்துவமனையின் தடயவியல் நிபுணரால் இன்று (07) பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


இதேவேளை, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் கிழக்குப்பிரிவுக்குப்பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட  பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி மேற்பார்வையில், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், நிந்தவூர் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமைப்பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த வேடகே தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe