சம்மாந்துறை அன்சார்.
மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கற்றல் சூழலை உறுதிப்படுத்தும் நோக்கில், வீரமுனை RKM மகாவித்தியாலயத்தில் நேற்று (11) சிறப்பு டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வொன்று மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் 'School Health Club', ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைப்பில், பாதுகாப்புப் படையினரின் பேராதரவுடன் இப்பணி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
இதன்போது, பாடசாலை வளாகத்தின் உட்புறச் சூழல், வகுப்பறைப் பகுதிகள் மற்றும் கழிவு நீர்க்கான்கள் அனைத்தும் முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள இடங்கள் அனைத்தும் முற்றாக அடையாளம் காணப்பட்டு துப்புரவு செய்யப்பட்டன.
இவ் ஊக்கமளிக்கும் கூட்டுப் பணியில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI), பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், School Health Club பிரதிநிதிகள் மற்றும் ஆர்வமிக்க மாணவர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் உழைத்தனர். "சுத்தமான சூழலில் சிறந்த கல்வியைப் பயில்வோம்" என்ற உன்னத நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதானப் பணி, மாணவர்களினதும் பெற்றோர்களினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.




