பாறுக் ஷிஹான்
தென்கிழக்கு பல்கலைக்கழக வீதி அபிவிருத்திப்பணிகள் தீவிரமாக ஆய்வு : பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க சம்மாந்துறைக்கு விஜயம்!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப்பணிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப்பிரிவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு கள ஆய்வுகளில் ஈடுபட்டார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்த விசேட கோரிக்கைக்கேற்பவே இவ்விஜயம் அமைந்திருந்தது.
இவ்விஜயத்தின் போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப்பணிகள் நேரில் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதன் போது, பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் நலன்கருதி நடைபாதையை மேலும் விஸ்தரித்தல், மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான பாதையை அமைத்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து விரிவாகக் ஆராயப்பட்டது.
அத்துடன், பிரதேசத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ஹிஜ்றா சந்தி சுற்றுவட்டத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கும், ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரையிலான வீதியை நான்கு வழிப்பாதையாக (4-Lane Road) அகலப்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அதிகாரிகளுக்கிடையில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில், கல்முனை அலுவலகத்தின் நிறைவேற்றுப்பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆஷிக் முஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்வி கான், பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, ரீ.ஸங்கீதன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

