Ads Area

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!



ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் நாடாளுமன்றத்தைக் கலைத்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு விதித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்காது தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றில் கோரினார்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற, நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.
அரசியலமைப்பின் பிரகாரமே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைக்க அறிவித்தல் விடுத்ததாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33ஆவது சரத்தின்படியே, நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இந்த சரத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்தார்.

எனவே, அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அடிப்படை உரிமை மனுக்களை டிசம்பர் 4, 5, 6 ஆம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வர்த்தமானி மூலம் உத்தரவிட்டார்.

இதனையத்து ஜனவரி 05ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் ஜனாதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe