கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் தீர்காணப்பட வேண்டியது அவசியமாகும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி கல்முனையில் முஸ்லிம் தரப்பினரால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் நேற்றுமுன்தினம் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பேரினவாத சக்திகள் நுழைந்து குளிர்காய்வதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்கு இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல், நாங்கள் நிதானமாக இந்த விடயத்தை கையாள வேண்டும்.
கல்முனை பிரதேசத்தில் 73வீதமான முஸ்லிம்களும், 23 வீதமான தமிழர்களும் வாழ்கின்றனர். 1989ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக உபபிரதேச செயலகம் அமைக்கப்பட்டது. தமிழ் மக்களின் நிர்வாகம் இதனூடாகவே மேற்கொள்ளப்பட்டது.
நிர்வாக ரீதியான எல்லை நிர்ணயம் என்பது, ஒரு தனி இனம் சார்ந்த விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில், எல்லைகளை வரையறுக்கும்போது, நிலத்தொடர்பற்ற முறையிலான அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்படக்கூடாது.
எவ்வாறாயினும், நாங்கள் எங்களுக்குள்ளேயே பேசி, இதுபற்றி உடன்பாட்டைக் காண வேண்டும். பேரின சக்திகள் நுழைந்து இந்த விடயத்தில் குளிர்காய்வதற்கு இடமளிக்க கூடாது.
தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு இன்று பேரிவாத சக்திகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்திகளுக்கு பலியாகிவிடாமல் நாங்கள் நிதானமாக இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.
எனவே, கல்முனைப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சதிவலைக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.