கல்முனை விடையத்தில் தரமுயர்த்தக் கோரும் பிரதேசத்தின் எல்லைகள் என பேசப்பட வேண்டியவைகள் ஏராளமுண்டு.
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் தரமுயர்த்தல் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்-முஸ்லிம் உறவு வேண்டப்படும் காலத்தில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிகிறது.
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச தரமுயர்த்தல் உண்ணாவிரதப் போராட்டம் உண்மையில் கல்முனை வாழ் தமிழ் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் எவரும் இதில் முரண்ட்டுக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
போராட்டங்கள் அவரவர் உரிமைசார்ந்த கருத்தாடல்கள் என்பதில் தெளிவாக உள்ளோம். கடந்த காலங்களில் தமிழ்-முஸ்லிம் மக்கள் இணைந்தும், தனித்தனியேயும் முன்னெடுத்த பல்வேறு போராட்ட வரலாறூகள் கல்முனையில் இருக்கின்றன.
அதேபோல் தமிழ் - முஸ்லிம் மக்களிடை
யே எழும் முரண்பாடுகளை போக்க சமூக தலைவர்கள், புத்திஜீவிகள், பிரதேச அரசியல் வாதிகள், சமூக பொறுப்புள்ளவர்கள் அடங்கிய குழுவினரைக் கொண்டு தீர்த்து வைத்த சரித்திர சம்பவங்களும் ஏராளம்.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் மக்களின் போர்வையில் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிப்போரிலிருந்து கண்டு கொள்ள முடிகின்றது.
ஒரு மொழி பேசும் தமிழ்-முஸ்லிம் மக்கள் தமக்குள் பேசி இணக்கப்பாடுகளை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை இல்லாமல் செய்வதெற்கென பேரினவாதிகளையும், குறிப்பாக முஸ்லிம்கள் மீது இனவாதம் பேசும் தமிழ் பிரதிநிதிகளையும் வரவழைத்து முஸ்லிம்களை விரல் நீட்டி இனவாத கருத்துக்களை இப்போராட்டத்தினூடாக தெரிவிப்பது இனவாதமாக தெரியவில்லையா?
தமிழ் - முஸ்லிம் மக்கள் உட்பட ஏனைய இன மக்கள் அனைவரும் இன ஐக்கியத்துடன் வாழ வேண்டுமாயின் கல்முனை பிரதேச செயலகம் ஒன்றே தீர்வாகும் இதனை கௌரவ அமைச்சர் அவர்கள் உணர வேண்டும்.
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகம் எனக்குறிப்பிடும் “தமிழ்” என்பது குறிப்பிட்ட இனத்தையா அல்லது மொழியையா குறிப்பிடுகின்றது? வடக்கு என்று குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் தெற்கு என்பதன் எதிரா? என்ற தெளிவில்லாத மயக்கங்கள் ஏராளம்.
இன்று அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தரும் பௌத்த துரவிகள், சிங்கள பிரதிநிதிகள் ஊதிப் பெருப்பிக்கும் உண்ணாவிரத்தை பார்க்கும் போது தமிழ்-முஸ்லிம் உறவு வேண்டப்படும் காலத்தை இல்லாமலாக்கும் துரும்பாகவே அனுமானிக்க முடிகின்றது.
கல்முனைக்கு 250 வருட எழுதப்பட்ட நிருவாக வரலாறு உள்ளது. இதனை திரிவுபடுத்த யார் முனைந்தாலும் அது தோல்வியில் முடியும். எவர் இனவாதம் பேசினாலும் முஸ்லிம் மக்கள் இன உறவையும் சமூக நல்லிணக்கத்தையும் முன் வைக்க துணிவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கௌரவ அமைச்சர் அவர்களே! தான் சார்ந்த இனத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று வரவேற்கத்தக்கது. அதனூடாக பக்கம் சார்ந்த கருத்துக்களை எவரும் பிழை காண நியாயமில்லை. பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில் துறைசார் அமைச்சர் வஜீர, மாவட்ட அமைச்சர் தயா கமகே என்று நின்று விடாமல் பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் உள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிகளையும் உள்வாங்கி கல்முனை இன நல்லிணக்கம் தொடர்பான தெளிவான புரிதலை எதிர்காலத்தில் முன்னெடுக்க முயற்சியுங்கள்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
கல்முனை