Ads Area

கல்முனை விடையத்தில் தமிழ் அரசியல்வாதிகளைப் ஒதுக்கி விட்டு தேரர்களை களமிறக்கியது சரியில்லை.

கல்முனை விடையத்தில் தமிழ் அரசியல்வாதிகளைப் ஒதுக்கி விட்டு தேரர்களை களமிறக்கியது சரியில்லை அமைச்சர்  மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் வரித்துக்கொண்ட அரசியல் நாகரீகம் ஒன்று இருக்கிறது. எனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல், இயன்றவரை அனைவரையும் அன்புடன் நிதானமாக அனுசரித்து போவேன். 

அப்படித்தான் நான், ததேகூட்டமைப்பையும் அரவணைத்து அனுசரித்து போகிறேன். அதனால்தான் கல்முனை மக்களின் அழைப்பின் பேரில் கல்முனைக்கு போக முடிவு செய்த போது கூட்டமைப்பின் அம்பாறை எம்பி கோடீஸ்வரனை அழைத்து சொன்னேன்.

அவர்தான் "சுமந்திரன் எம்பியை, வஜிர அமைச்சரின் உறுதி கடிதத்துடன் எப்படியாவது கூட்டி வாருங்கள் அண்ணா" என்று என்னை வலிந்து கேட்டுக்கொண்டார்.

ஆகவே நான்தான் நண்பர்கள் தயா கமகேவையும், சுமந்திரனையும் கல்முனைக்கு அழைத்து வந்தேன். அங்கே சுமந்திரனுக்கு கிடைத்த எதிர்மறை வரவேற்பை நான் வெறுக்கிறேன். எனக்கு நேர்மறை வரவேற்பு கிடைத்தது, என்பதற்காக சுமந்திரனை தாக்க முயன்றதை நான் ஒருபோதும் ஏற்க முடியாது.

ததேகூ பல விடயங்களை கோட்டை விட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்கான பதில் இதுவல்ல. அதேபோல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளை நிராகரித்து விட்டு, பெளத்த தேரர்கள் கூறியதன் பேரில் போராட்டத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் முனைவது சரியானதல்ல.

தமிழ் தலைமைகளின் இயலாமை காரணமாகவே தமிழ் மக்கள் மாற்று வழி தேடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் கிழக்கு தமிழர்களின் மாற்று இந்த தேரர்கள் அல்ல.

அதேபோல் தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு, தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதக்கார முஸ்லிம் தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும்.

இதற்கான விளைவு விரைவில் அனைவரையும் சுடும். எதிர்பாருங்கள். அதேபோல், என்னை நம்பும் மக்களை நானும் ஒருபோதும் கைவிடுவதில்லை. இன்று அம்பாறை தமிழ் மக்கள் என்னை நம்புகிறார்கள். எனது கடமைகளை அவர்களுக்காக நான் செய்வேன்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe