Ads Area

எங்களை சித்திரவதை செய்யவேண்டாம் சுட்டுக்கொல்லுங்கள் - காஸ்மீர் இளைஞர்கள்

எங்களை சித்திரவதை செய்யவேண்டாம் சுட்டுக்கொல்லுங்கள் - காஸ்மீர் இளைஞர்கள்.

காஸ்மீர் மக்கள் தாங்கள் இந்திய படையினரால் தாக்கப்படுவதாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் வேதனை வெளியிட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

ஜம்முகாஸ்மீரிற்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்திய மத்திய அரசாங்கம் இரத்து செய்த பின்னரே இவ்வாறான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது.

தடிகள் பொல்லுகளாலும் தாக்கப்பட்டதாக பல காஸ்மீர் கிராம மக்கள் தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ள பிபிசி  மின்சார சித்திரவதையும் இடம்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டனர் என செய்தி வெளியிட்டுள்ளது.

பலர் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் சித்திரவதைகளால் தங்களிற்கு ஏற்பட்ட காயங்களை காண்பித்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களில்  இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையின் மையமாக மாறியுள்ள காஸ்மீரின் தென்பகுதி மாவட்டங்களிற்கு தான் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள சமீர் ஹஸ்மி இந்த கிராமங்களில் பலரிடமிருந்து இதேபோன்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் இரவுநேர சோதனை நடவடிக்கைகள் தாக்குதல்கள் சித்திரவதைகள் குறித்து தெரிவித்தனர் என ஹஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

நோயாளிகள் குறித்து வைத்தியர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தயங்குகின்றனர் என தெரிவித்துள்ள பிபிசி செய்தியாளர் இந்திய படையினரின் தாக்குல்களால் ஏற்பட்டதாக தெரிவித்து கிராமத்தவர்கள் என்னிடம் காயங்களை காண்பித்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

காஸ்மீரிற்கான சிறப்பு அந்தஸ்;த்து நீக்கப்பட்டவுடன் உடனடியாக இராணுவத்தினர் தங்கள் கிராமத்தில் வீடுவீடாக தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர் என ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களை உறக்கத்திலிருந்து எழுப்பி வெளியேஅழைத்து சென்றார்கள்,அந்த பகுதியில் எங்களை போன்று பலர் காணப்பட்டனர் என இரு சகோதரர்கள் பிபிசி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் தங்கள் பெயர் விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.

இந்திய படையினர் எங்களை தாக்கினார்கள்  , நாங்கள் அவர்களிடம்  எதற்காக எங்களை அடிக்கின்றீர்கள் நாங்கள் என்ன செய்தோம் ஏதாவது தவறு செய்தோமா என கேட்டோம் என இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர்,

ஆனால் இந்திய படையினர் நாங்கள் தெரிவிப்பதை செவிமடுக்காமல் எங்களை தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர் எனவும் இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள்  உடலின் அனைத்து பகுதிகளிலும் தாக்கினார்கள்,காலால் உதைத்தார்கள் தடியால் அடித்தார்கள் மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள் வயர்களால் தாக்கினார்கள் காலில் பின்பகுதியில் அடித்தார்கள் நாங்கள் மயங்கிய பின்னர் எங்களிற்கு சுயநினைவு திரும்ப செய்வதற்காக மின்சார அதிர்ச்சியை கொடுத்தார்கள்,என தெரிவித்துள்ள சகோதரர்கள் அவர்கள் அடித்தவேளை நாங்கள் கதறினோம் அவ்வேளை அவர்கள் எங்கள் வாயில் சேற்றை அடைத்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நாங்கள் அப்பாவிகள் என இந்திய படையினரிடம் தெரிவித்தோம்,ஏன் இதனை செய்கின்றீர்கள் என கேட்டோம் அவர்கள் எங்களை செவிமடுக்கவில்லை நாங்கள் அவர்களிடம் எங்களை அடித்து சித்திரவதை செய்யவேண்டாம் சுட்டுக்கொல்லுங்கள் என கேட்டோம் எனவும் இரு சகோதரர்களும் தெரிவித்துள்ளனர்.

சித்திரவதை தாங்க முடியாமலிருந்ததால் ஆண்டவரே எங்களை உங்களிடம் அழைத்துக்கொள்ளும் என வேண்டினேன் எனவும்  சகோதரர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு படையினரால் தான் தாக்கப்பட்டதாக தெரிவிக்கும் மற்றொரு நபர் ஆர்ப்பாட்டங்களின் போது கல் எறிபவர்களை காட்டிகொடுக்குமாறு இந்திய படையினர் கேட்டனர் என தெரிவித்துள்ளார்.

நான் அவர்கள் எவரையும் தெரியாது என தெரிவித்தேன் அதற்கு அவர்கள் எனது ஆடைகளை அகற்றுமாறு கேட்டனர் என தெரிவித்துள்ள அந்த இளைஞன் அதன் பின்னர் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் அவர்கள் என்னை ஈவிரக்கமின்றி தாக்கினர் நான் சுயநினைவிழந்த வேளை மின்சார அதிர்ச்சி கொடுத்து எனக்கு மீண்டும் நினைவு திரும்பசெய்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மீண்டும் இதனை செய்தால் நான் என்னவேண்டும் என்றாலும் செய்வேன் துப்பாக்கி ஏந்துவேன் என்னால் இதனை ஒவ்வொரு நாளும் தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை இந்திய இராணுவம் நிராகரித்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் எவையும் எங்கள் கவனத்தி;ற்கு வரவில்லை என தெரிவித்துள்ள இந்திய இராணுவம் படையினர் பொதுமக்கள் எவரையும் இவ்வாறு நடத்தவில்லை, இது  உள்நோக்கம் கொண்ட சக்திகளின் குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe