ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவருமான சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், நேற்று (புதன்கிழமை) அவர் இவ்வாறு இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், சாய்ந்தமருதில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சமரில் சஹ்ரானின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இதன்போது சஹ்ரானின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோரை காயமடைந்த நிலையில் படையினர் மீட்டிருந்தனர்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தடுப்பில் உள்ள சஹ்ரானின் நான்கு வயது மகளை, அவரின் மனைவியின் பெற்றோரிடம் பொறுப்பளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.