கோத்தபாய மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி..?
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மஹிந்த தரப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கோத்தாபய ராஜபக்சவிடம் கோரப்பட்டிருந்தது.
இதில் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றம் இல்லை என சுமந்திரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விட தெற்கிலுள்ள மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக மஹிந்தவும் கோத்தாபயவும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
எதிர்கால அரசாங்கத்தில், வடக்கு,கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு தீர்வுகளை வழங்க முடியும் என்று நம்புவதாக மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவும், கூறியிருந்தனர்.
கோத்தாபய ராஜபக்சவுடன் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து மேலும் விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், ஏனெனில் ராஜபக்சவினரிடம் இருந்து தமிழ் மக்களால் ஒருபோதும் தமது உரிமைகளை வெல்லவோ அல்லது எந்த நிவாரணத்தையும் பெறவோ முடியாது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

