(பாறுக் ஷிஹான்)
அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று என அடையாளப்படுத்தப்பட்டவருடன் பழகிய 43 பேரை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்பகுதியில் உள்ள வெலிக்கந்தை கொரோனா தடுப்பு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை(8) அன்று முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (9) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் வெளிநாடு ஒன்றில் இருந்து மத கடமைகளை முடித்த பின்னர் கடந்த 16ஆம் திகதி இலங்கைக்கு திரும்பி இருந்தார். குறித்த நபருடன் இணைந்ததாக மேலும் 5 பேரை கொவிட் -19 பரிசோதனை செய்து அதன் அறிக்கைகளை பெற்றிருந்தோம் . அந்த அடிப்படையில் அந்த பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒருவரான இந்த குறிப்பிட்ட நபர் தற்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
மேலும் குறித்த பாதிக்கப்பட்ட நபருடன் இணைந்ததாக நேரடித் தொடர்புள்ள இரண்டாம் நிலையில் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படும் 43 பேர் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களையும் நாங்கள் தனிமைப்படுத்துவது அல்லது தடுப்பு நிலையங்களுக்கு அனுப்புவது தொடர்பாக ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு இருக்கின்றோம். நான் இன்று காலை ஜனாதிபதி செயலக பிரிவினருடன் கதைத்திருந்தேன் அத்துடன் கிழக்கு மாகாண இராணுவ தளபதியுடனும் பேசியிருக்கின்றேன். இதனடிப்படையில் ஒரு முடிவு எட்டப்படும் என நினைக்கின்றேன். மேலும் சம்மந்தப்பட்டவர்களை அக்கரைப்பற்றில் உள்ள அவர்களது இல்லங்களில் தனிமைப் படுத்துவதா அல்லது ஒரு தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்துவதா என்கின்ற ஆலோசனை நடந்து கொண்டிருக்கின்றது. தீர்வு ஏற்படும் பொழுது அதற்கேற்ப நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.
இது தவிர இன்னொருவரிடம் நாங்கள் செல்லும்போது அவசர அவசிய விடயங்களுக்காக அவர்களை நெருங்கும் நேரத்தில் நாங்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும். வீட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்து விடுங்கள் இந்த தனிமைப்படுத்தல் உத்திகளை கடைப்பிடியுங்கள் ஊரடங்கு சட்டம் செயற்படுத்தபடும் நேரங்களில் நாங்கள் வீட்டில் முழுவதுமாக இருந்து இந்த சமூகத்துக்கு உறவுகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.