குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடனே செயற்படுகின்றது.
குவைத் நாட்டில் இருந்து வந்த இலங்கையர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அனுப்பும்போது குருதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை என்றும் குவைத் அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இவர்கள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் .
நாட்டுக்குள் வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.