தமிழ் நாட்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி பெருந்தொற்று காலத்தில் போலி மருத்துவர்கள் வலம் வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் இயங்கும் குழு கண்டறிந்துள்ளது.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர், 2019-20 ஆம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து இந்திய தண்டனைச் சட்டம் 419, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கபட்டனர்.
அதே போன்று 2020-21ம் ஆண்டில் 31 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு மருத்துவமனை சட்டம் 2018 படி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தின் புகார் அடிப்படையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா நெருக்கடி காரணமாக, 2020 - 21 ஆம் ஆண்டில், 31 பேர் மட்டுமே குழுவினரால் கண்டறிய முடிந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த குழுவின் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.