அரபு நாடுகளை தீவிரவாதிகளின் புகலிடமாக காட்டும் படங்கள் தடை செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே பெல்பாட்டத்தை தடை செய்திருக்கிறார்கள்.
அக்ஷய் குமார் நடிப்பில் ஆகஸ்ட் 19 வெளியான திரைப்படம் பெல்பாட்டம். ஸ்பை த்ரில்லரான இது, கொரோனா இரண்டாம் அலை ஊரடங்குக்குப் பின் வெளியான முதல் பெரிய பட்ஜெட் இந்திப் படமாகும். இந்தப் படத்துக்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளன.
பெல்பாட்டம் படம் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது நடந்த பயணிகள் விமானக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மட்டும் இப்படம் வெளியானது. இந்த வார இறுதியில் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படம் வெளியாக உள்ளது. அத்துடன் யுஎஸ், யுகே உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் திரையரங்கில் பெல்பாட்டம் வெளியானது.
இந்தியப் படங்களின் முக்கிய சந்தையான அரபு நாடுகளில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சவுதி அரேபியா, கத்தார், குவைத் நாடுகள் பெல்பாட்டத்தை தடை செய்துள்ளன. அரபு நாடுகள் குறித்து பெல்பாட்டத்தில் தவறாக சித்தரித்திருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
முன்பு அரபு நாடுகளில் படப்பிடிப்பு நடத்த எளிதாக அனுமதி கிடைத்து வந்தது. ஆனால், தொடர்ச்சியாக வில்லன் அரபு நாடுகளில் பதுங்கியிருப்பதாக படங்கள் எடுக்கப்பட, அரபு நாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால், எந்தக் காட்சியை படமாக்குகிறார்கள் என்று படத்தின் திரைக்கதையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரபு நாடுகளை தீவிரவாதிகளின் புகலிடமாக காட்டும் படங்கள் தடை செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே பெல்பாட்டத்தை தடை செய்திருக்கிறார்கள்.