எஸ்.எம்.எம்.முர்ஷித்
எரிபொருள் தட்டுப்பாடு நாளாந்தம் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விசாயிகள், வாகனங்களைக் கொண்டு அன்றாடத்தொழிலில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினைப் பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஓட்;டமாவடி மற்றும் வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வரும் என அறிந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்குத் தேவையான பெற்றோல், டீசலினை பெறுவதற்காக நான்கு கிலோ மீற்றர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.
அந்த நிலையில், வாழைச்சேனை எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வராதெனத் தெரிவித்த நிலையில், வரிசையில் நின்ற பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் அவ்விடத்தில் பொலிஸாரின் தலையீட்டினால் குழப்ப நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பெற்றோல் வரும் போது வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு பெற்றோல் வழங்குவதற்கான அனுமதித் துண்டுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்;டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை டீசல் மாத்திரம் வாகனங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், இதற்கும் வாகனங்கள் சுமார் நான்கு கீலோ மீற்றர் தூரம் வரை நின்று டீசலைப் பெற்றுக் கொண்டனர்.
தற்போது விவசாயச்செய்கை இடம்பெற்று வரும் நிலையில், விவசாயச்செய்கை, தோட்டச்செய்கை மேற்கொள்ள டீசல் தேவைப்படுவதுடன், கடற்றொழில் செல்லும் மீனவர்களுக்கும் டீசல், மண்ணெண்ணெய் தேவைப்பாடு அதிகமாகக் காணப்பட்டுகின்றது.
இதனால் எரிபொருளை நம்பி தொழில் செய்பவர்கள் டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல் என்பவற்றுக்கு பல மணி நேரம் வெயிலில் இருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
தங்களது தேவைகள நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மக்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு நாளை இதற்காக தியாகம் செய்ய வேண்டிய நிலை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்பு வழங்கப்பட்டு காணப்படுகின்றது.