பாறுக் ஷிஹான்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பிற்கு அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இன்று (26) சாய்ந்தமருது, காரைதீவு, ஒலுவில், அட்டப்பளம், நிந்தவூர் வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை, திருக்கோவில் வைத்தியசாலைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் கடமையை உரிய முறையில் மேற்கொள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கோரி இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (11ம் திகதி) திருக்கோவில் மெதடிஸ்த மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3ம் பிரிவு துரையப்பா வீதியைச்சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஜெயக்குமார் விதுர்ஜன் மயங்கி வீழந்தார்.
மயங்கி வீழ்ந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் எனக்குற்றஞ்சாட்டி வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வைத்தியசாலை மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன், வைத்தியசாலையின் பெயர்ப்பலகையையும் உடைத்து சேதப்படுத்தியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில், 5 மணித்தியால ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அதனைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவன் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசேதனையில் கண்டறியப்பட்டதுடன், அவரின் உடற்கூறுகள் அரச பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சடலம் கடந்த 12ம் திகதி உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பில்லை எனவம், அரச சொத்தான வைத்தியசாலைக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தவர்களைக் கைது செய்யுமாறு கோரியும் கடந்த 10 நாட்களுக்கு மேல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வைத்தியசாலைச் செயற்பாடுகள் அனைத்தும் செயழிழந்துள்ளது.
இதனையடுத்து, வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 50 பேரை இனங்கண்டு கொண்ட பொலிஸார் பெண்ணொருவர் உட்பட 6 பேரைக்கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நேற்று திங்கட்கிழமை (25) கொழும்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் திருக்கோவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்குமிடையில்கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.