சம்மாந்துறை அன்சார்.
நோன்பு காலம் வந்தாலே என்றுமில்லாவாறு தெருவெல்லாம் சமூசா, கட்லட், பெட்டீஸ் மற்றும் வடை போன்ற உறப்புத் திண் பண்டங்கள் விற்கும் கடைகள் தெருவுக்கு தெரு வந்து விடுகின்றது.
பலகாலம் உறப்புக்கள் விற்று வந்த கடைக்காரர்கள் முதல் கொண்டு நோன்பு காலத்தில் மாத்திரம் உருவான கடைக்காரர்கள் வரையிலும் அத்தனை பேரும் ஒரு பெட்டியில் உறப்புக்களை விற்க வீதிக்கு வந்து விடுகின்றனர்.
இவர்களது நோன்பு கால உறப்புக்கள் நன்றாக உள்ளனவா...?? சுவை மிகுந்ததாக உள்ளனவா..??? ஆரோக்கியமான முறையில் செய்கிறார்களா..?? கொடுக்கும் பணத்திற்கு நியாயமாக கிடைக்கின்றனவா..?? என்று பல கேள்விகள் கேட்டால் நிச்சயம் அவற்றுக்கு சிறந்த விடை கிடைக்காது காரணம் அத்தனையும் வெறும் வியாபார நோக்கமாக பணத்தை மாத்திரம் குறிக்கோள்களாக வைத்து சட்டென்று சுட்டு பட்டென்று விற்கப்படுபவைகளாகவே உள்ளது.
நோன்பு கால பயபக்தி, மனட்சாட்சி கூட இல்லாது சிலர் இந்த உறப்புக்கள் விடயத்தில் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
ஆரோக்கியமற்ற எண்ணையில் பொறித்தெடுத்து அவற்றை விற்கின்றார்கள், சிலர் இறைச்சி பெட்டிஸ், இறைச்சி சமூசா என்று சொல்லி விற்கிறார்கள் ஆனால் அவற்றில் இறைச்சியின் மணமும் கூட இருப்பதில்லை அதற்காக காசை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த உறப்புக்களில் வெறும் மாவுதான் அதிகம் இருக்குமே தவிர அதற்குல் எந்த வித கறிவகைகளும் அவர்கள் வைப்பதில்லை.
சிலர் ஆரோக்கியமற்ற முறையில் இவற்றினை தயாரித்து விற்கின்றார்கள், சிலர் நேற்று விற்காது விட்டவைகளை இன்று சூடாக்கி மீண்டும் அப்பாவி நோன்பாளிகளின் தலையில் கட்டி விடுகிறார்கள்.
பொதுமக்களாகிய நாம் இது விடயத்தில் விழிப்பாக செயற்படுவது அவசியம்.