பாறுக் ஷிஹான்.
விவாகரத்துச்சான்றிதழொன்றை வழங்குவதற்காக 5,000 ரூபாவினை இலஞ்சமாகக்கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் குறித்த காதி நீதிபதி முகமட் என்பவரை அணுகி விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக ரூபா 5,000 இலஞ்சமாகப்பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மாறுவேடத்தில் சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான காதி நீதிபதி அன்றிரவு புத்தளம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் மே 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த காதி நீதிபதி தொடர்பிலான விமர்சனங்கள் மற்றும் அவரின் முறையற்ற செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்ததுடன், இவ்விடயம் தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஊடாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் மற்றும் நீதியமைச்சருக்கும் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் இது தொடர்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.