அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள், கடற்கரைப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள், நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
அத்துடன், உள் வீதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாதளவுக்கு கட்டாக்காலி மாடுகள், நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக்காணப்படுவதுடன், வீதியில் செல்பவர்களை தெரு நாய்கள் கடிக்க வருகின்றன.
இதன் காரணமாக வீதியில் பயணம் செய்வோர் விழுந்து காயங்களுக்குள்ளாகின்றனர்.
மேலும், வீதிகள், கடற்கரைப்பகுதிகளில் கொட்டப்படும் விலங்கு எச்சக்கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இப்பகுதிகளில் சுகாதாரச்சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது 20க்கும் மேற்பட்ட நாய்கள் கட்டாக்காலிகளாக உலாவி கழிவுகளை உண்பதற்காக வெளியிடங்களிலிருந்து உட்பிரவேசிக்கின்றன.
மேலும் இப்பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு, பகல் பாராது மேற்படி கட்டாக்காலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக, கூட்டம் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதினாலும் வீதிகளில் கூட்டமாகக் கிடப்பதினாலும் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
எனவே, கட்டாக்காலி மாடுகள், நாய்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி மக்களை விபத்துக்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.