Ads Area

சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்பு ; இருவர் கைது!

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல் 13ம் வீதி, மலையடிக்கிராமம் 03 எனும் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை 02.30 மணியளவில் பெறுமதி வாய்ந்த "Hero Hunk" என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக  சைக்கிள் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை 23ம் திகதி முறைப்பாடு  செய்யதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக அதிரடியாக தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட போது பொத்துவில் பிரதேசத்தில் குறித்த மோட்டார் சைக்கிளும், சந்தேக நபர்களும் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொத்துவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நேற்று (23) சனிக்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும், திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய  சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த 20 மற்றும் 28 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன். குறித்த, திருட்டுச் சம்பவம் நடைபெற்று 24 மணித்தியாலயத்திற்குள் மோட்டார் சைக்கிளை மீட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.


சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் இத் தேடுதல் நடவடிக்கையானது இடம் பெற்றுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe